Thursday, October 15, 2020

திருமணியாழ்வானுக்கு வாழி திருநாமம்!!

Swami Vedanta Desika #750thBirthday #JanmaNakshatra | 

ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை எம்பெருமானார் காட்டிய வழியிலே சற்றும் மாறாமல் காப்பாற்றித் தந்த வள்ளல் ஸ்வாமி தேஶிகன்.

இவரது அருமை பெருமைகளை அனைவரும் அறிந்து போற்றி உகக்கும் வகையில் ஓர் சிறந்த  வாழி திருநாமம் ஸாதித்தள்ளார் அவரது ப்ரதம ஸிஷ்யர் ப்ரம்ஹ தந்த்ர ஸ்வதந்த்ரர்.

"வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னு புகழ் பூதூரான் மனமுகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ் மறைகள் தெளிந்துரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப்பர கதியைத் தந்தளிப்போன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!"


சுருக்கமாக இத்திரு நாமங்களுள் பொதிக்கப்பட்டுள்ள அர்த்த விஸேஷங்களை ஆராய்ந்து அனுபவிப்வோம்.

  • வஞ்சப் பரஸமயம் மாற்ற வந்தோன் வாழியே!!

5 வயது பாலனாய் நடாதூர் அம்மாளின் க்ருபைக்குப் பாத்ரமானவர் ஸ்வாமி தேஶிகன் தன் மாதுலர் கிடாம்பி அப்புள்ளாரிடம் அனைத்து ஸாஸ்த்ரங்களையும் தம் 21 வயதுக்குள் கற்றுத்தேர்ந்தார் அப்போதிருந்து துவங்கியது அவரது ஸம்ப்ரதாய  ஸம்ரக்ஷண கைங்கர்யம்.
வஞ்சம் செய்து மக்கள் மனதை திசை திருப்ப முயன்ற பௌத்தம் ஜைனம் ஸார்வாகம் போன்ற பல மதங்கள் உலா வந்த காலம் அது. அனுஷ்டானங்கள் நிறைந்த வைதீக மதத்தை விடுத்துத் தங்கள் மதத்துக்கு மாற அறைகூவினர்.
"பொங்கு போதியும் பிண்டியுமுடைப்புத்தர் நோன்பியர் பள்ளியுள்ளுறை"-(2--1--5)
"துவரி ஆடையர் மட்டையர் கமண் தொண்டர்கள் மண்டியுண்ட பின்னரும்"-(2-1-6)
"தருக்கினால் சமண் செய்து சோறுதண்தயிரினால் திரளை மிடற்றிடை நெருக்குவார் (2-1-7)

மேற்கூறிய கலியன் பாசுரங்கள் பிற மதங்கள் வேதமதத்துக்குத் தந்த தாக்கத்தைக் காட்டுகின்றன.
வேத மதத்தை அழிக்க வந்தவர்களை வாழையை அழிக்கும் வாரணம் போல மாய்த்துக்காத்த ராமானுசமுனியின் இன்னுரையினால்தெளிந்த சிந்தைக்கு இனித்தீங்கில்லை என்கிறார்.
ஸ்வாமி அதிகார ஸங்க்ரஹத்தில் இத்தகைய வஞ்சப்பர சமயத்தவர்களை  பரமதபங்கம், ஶததூஷணீ என்ற க்ரந்தங்கள் மூலம் வாதிட்டு மாற்றினார்.
நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார், எம்பெருமானார், பிள்ளான், எங்களாழ்வான் வழியாக வந்த ஸம்ப்ரதாயத்தை நமக்கு பரமத தாக்கத்திலிருந்து மீட்டுத் தந்தவர் ஸ்வாமி தேஶிகன்.

 

 

Friday, September 11, 2020

ராமானுஜ தயா பாத்ரம்


Thoopul Swami Desikan Durmukhi Varusha Aippasi Sravana Purappadu |  Anudinam.orgSwami Vedanta Desika #750thBirthday #JanmaNakshatra |  
"ராமானுஜ தயா பாத்ரம்
ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம்
வந்தே வேதாந்த தேசிகம்"
32 அக்ஷரங்கள் கொண்ட  இந்த தனியன் ஸ்ரீ ப்ரம்ஹ தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் என்ற ஸ்வாமி தேசிகனின் ப்ரதம ஸிஷ்யரால் ஸமர்ப்பிக்கப்பட்டது.
"ராமானுஜரின் தயைக்குப் பாத்ரமானவரும், சிறந்த ஞானத்தையும் வைராக்யத்தையும் ஆபரணமாகக் கொண்டவரும், திருவேங்கடவனின் கருணையால் தோன்றிய வேதாந்த தேசிகனை வணங்குகிறேன்"-- என்பது இத்தனியனின் அர்த்த விசேஷம்.
எம்பெருமானாரின் மானஸீக ஞானபுத்ரனாகிய திருக்குருகைப்பிரான் பிள்ளான் எம்பெருமானாரின் திருவாக்குப்படி திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் அருளினார். அதுவே "திருஆறாயிரப்படி" என்ற பகவத்விஷயத்துக்கான முதல் வ்யாக்யானமாகும். இதனை அடியொற்றி ஸ்வாமி தேசிகன் அருளிய வ்யாக்யான க்ரந்தம் "நிகமபரிமளம்" என்பது (64 ஆயிரப்படி) ப்ரம்ஹதந்த்ர ஸ்வதந்த்ரர் ஸ்வாமியின் திருக்குமாரர் ஸ்ரீ குமாரவரதாச்சாரியாரிடம் பகவத் விஷயக் காலக்ஷேபம் கேட்க அனுமதி பெற்ற ஸம்பவத்தில் ஆவணி ஹஸ்தத்தன்று பிறந்த தனியன்தான் "ராமானுஜ தயாபாத்ரம்".
நிகமபரிமளத்தின் அடியொற்றி பகவத் விஷயம் காலக்ஷேபம் கேட்டு
ஆசார்யனுக்கீடான கீர்த்தி ஆசார்யனது குமாரருக்கும் உண்டெனக் காட்டுகிறது இச்சம்பவம்.
ஒரு ஸ்லோகத்துக்குப்பல அர்த்த விசேஷங்களை அளிப்பதில் ஸமர்த்தர் ஸ்வாமி தேசிகன். 
"ஸூபாஷித நீவி" என்ற க்ரந்தத்தில் ஸ்வாமி தேசிகன் ஒரு ஸ்லோகத்துக்கு 20அர்த்தங்கள் ஸாதித்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான விஷயம். 
"பாதுகா ஸஹஸ்ரத்திலும்" நிறைய ஸ்லோகங்களுக்கு 10க்கும் மேற்பட்ட அர்த்த விஸசேஷங்கள் உள்ளன.
ஆக ஸ்வாமியின் ஸிஷ்யர் ஸாதித்த தனியனுக்கு  ஆச்சார்யர்கள் ஸாதித்துள்ள அர்த்த விசேஷங்கள் பல.     
எப்படி எல்லாம் ஸ்வாமி தேசிகன் ராமானுஜ தயா பாத்ரமாக ஆகிறார் எனப்பார்ப்போம்.
  1. ராமானுஜ ஸித்தாந்தத்தில் திளைத்து  அவரே ஸ்வப்னத்தில் தோன்றி விஸிஷ்டாத்வைத   ஸித்தாந்தத்தை ப்ரகாசிக்கச்செய்ய  ஆசி வழங்கியதால் ராமானுஜ தயா பாத்ரமாகிறார். ஸ்வாமி தேசிகன் எம்பெருமானாரின் அனைத்து க்ரந்தங்களுக்கும் ஸ்வாமி தேசிகன் வ்யாக்யானம் ஸாதித்துள்ளார்.
  2. சித்திரை ஆதிரையில் தோன்றி ஸ்வாமி தேசிகனுக்கு 5ம் வயது தொடங்கி 20வயதுக்குள் ஸகல கலைகளையும் கற்றுவித்து த்வய திருமந்த்ர உபதேசமளித்தவர் அவரது மாதுலர் கிடாம்பி அப்புள்ளார் எனும் ராமானுஜர். கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் எனக்கு சொல்லிப்பழக்கினார் என ஸ்வாமி கூறுகிறார். அவரது தயைக்குப்பாத்ரமானதால் ராமானுஜ தயாபாத்ரம்.
  3. காடுறையப்போ என்றதும் புறப்பட்ட ஸீதாராமனைச்சரணாகதி செய்த இளைய பெருமாளின் மறு அவதாரமே ராமானுஜர். அவரது தயாபாத்ரமாகிறார். பெருமாளுக்கீடான பெருமை உடைய தாயாரையும் சேர்த்து சரணாகதி செய்கிறார் இளைய பெருமாள்.
  4. ராமனின் அனுஜன் பரதன் சரணாகதிசெய்து பாதுகைபெற்றான். பரதன் பெற்றது பகவத்ஸேஷம். அந்த ராமானுஜனின் தயைக்குப் பாத்ரமாகி பாதுகாஸஹஸ்ரம் ஸாதித்தார்.
  5. ராம அனுஜன் சத்ருக்னன் தயைக்குப் பாத்ரமாகி பாகவத ஸேஷத்வம் பெற்றார். (ஸ்வாமியை அவமதிக்கும் வகையில் அவரது க்ருஹத்தில் தோரணமாயிட்ட பாதரக்ஷைகளை பாகவத பாதுகைகளாய் ஏற்றது).
  6. க்ருஷ்ணாவதாரத்தில் பலராமனுக்கு அனுஜனாகிய க்ருஷ்ணன்  "கோபாலவிம்சதி" என்ற ஸ்லோகத்தைச்செய்விக்கச் செய்து தன் 20 லீலைகளையும் தேசிகன் அனுபவிக்கும்படி காட்டி அருளி  ராமானுஜ தயாபாத்ரமாக்குகிறார். காவ்ய ரத்னம் எனும் "யாதவாப்யுதயம்" என்ற மஹாகாவ்யம் அருளினார். நம்மாழ்வாரையடுத்து க்ருஷ்ண தர்சனம் பெற்ற பெருமை ஸ்வாமி தேசிகனுக்கே.
  7. ஸ்ரீராம மிஸ்ரர் எனும் மணக்கால்நம்பியை ஆசார்யனாகக் கொண்டவர் ஆளவந்தார். ஸ்ரீ ராமமிஸ்ரரின் அனுஜனாக அவருக்குப்பின்வந்த ஆளவந்தார் ராமானுஜராகிறார். நாதமுனி அருளியவற்றை எல்லாம் ராமானுஜரிடம் கொண்டு சேர்த்தவர் ஆளவந்தார். இவர் அருளிய அத்தனை க்ரந்தக்களுக்கும் வ்யாக்யானம் அருளி ராமானுஜ தயாபாத்ரமாகிறார் ஸ்வாமி தேசிகன்.
  8. திருக்குருகைப் பிரான் பிள்ளான் ராமானுஜருக்குபின் ஸிம்ஹாஸனாதிபதியான அவரது ஞானபுத்ரன். அவர் அருளிய திருவாய்மொழி வ்யாக்யானத்துக்கு உரை எழுதி ராமானுஜ தயாபாத்ரமாகிறார்.
  9. ராமானுஜரை நடுநாயகமாய் வைத்த ஸ்வாமி தேசிகன், திரு முடிசம்பந்தம் பெற்ற ஆழ்வார்கள் திருவடி சம்பந்தம் பெற்ற ஆசார்யர்களின் தயைக்குப்பாத்ரமாகி ராமானுஜ தயாபாத்ரமாகிறார்.
  10. எல்லா பெருமாள்களின் தயைக்குப்பாத்ரமாகிய எம்பெருமானார்க்கு எல்லாவற்றையும் அளித்து  "உடையவர்" ஆக்கினான் அரங்கன். "கத்யத்ரயம்" அருளி சரணாகதி செய்த அந்த எம்பெருமானாரின் தயைக்குப்பாத்ரமாகிய ஸ்வாமி தேசிகனை வேதாந்தாசார்யனாக்கிய ரங்கனுக்கு "பாதுகா ஸஹஸ்ரம்" அருளிச் செய்தார் ஸ்வாமி தேசிகன்.
காஞ்சி வரதனுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்து முக்தி மழை பொழியும் முகில் வண்ணனாக்கிய எம்பெருமானாரின் தயைக்குப்பாத்ரமாகிய ஸ்வாமி தேசிகன் "அத்திகிரி மஹாத்மியம்" செய்தருளினார்.
சங்கு சக்ரம் ஸமர்ப்பித்து திருமலையப்பனை ஸ்தாபித்த  எம்பெருமானாரின் தயைக்குப்பாத்ரமாகிய ஸ்வாமி தேசிகன் "தயா சதகம்" அருளினார்
திருநாராயணபுரத்தின் "செல்வப்பிள்ளையை" தன் "செல்லப்பிள்ளை" யாக்கிய எம்பெருமானாரின் தயையினால் ஸ்வாமி தேசிகனை திருநாரணன் தன் கைங்கர்யத்தில் ஈடுபடச்செய்து "ராமனுஜ தயாபாத்ரம்" தனியன் ஏற்படுத்தி உகந்தான் அந்த திருநாரணன்.

இத்தகைய பெருமைவாய்ந்த இந்த தனியன் அத்யயன உத்ஸவத்தில் ஸேவிக்கப்படும் சீர்மை பெற்றுள்ளது.

அரிதான இந்த தனியன் விளக்கங்கள் ஆவணி ஹஸ்தத்தன்று நாவல்பாக்கம் ஸ்ரீ வாஸூதேவாச்சார் ஸ்வாமியின் உபன்யாஸத்திலிருந்து  தொகுக்கப்பட்டது(21-8-20)
********************🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸***************

Monday, August 31, 2020

அவனி போற்றும் அழகிய சிங்கர்!

246 Srirangam Temple Photos - Free & Royalty-Free Stock Photos from  Dreamstime

ஆசார்யர்களின் அவதாரம் அத்புதமானவை. ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹனே தன் விக்ரஹத்தை அளித்து ஆதிவண்சடகோபனை ஸ்தாபகராக்கி ஆல்போல் தழைத்து வளர்ந்துள்ளதே இந்த அஹோபில மடம். இதனை நிர்வகித்து வரும் அழகிய‌ சிங்கர்கள் அனைவருமே அத்புதமானவர்கள்.

"அங்கண்ஞாலம் அஞ்ச அங்கு ஓர்ஆளரியாய் அவுணன் பொங்க 
ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் பைங்கணானைக்கொம்பு கொண்டு
பத்திமையால் அடிக்கீழ் செங்கணாளிட்டிறைஞ்சும்
சிங்கவேள் குன்றமே" 

(1-7-1) பெரிய திருமொழியில் கலியன் அருளிய அஹோபிலப் பாசுரம்.
"தந்தையிடம் கோபத்தையும் தனயனிடம் வாத்ஸல்யத்தையும் ஒரேஸமயத்தில் காட்டும்படியாக எம்பெருமான் நரசிங்கமாகத்தோன்றி அரக்கனைஅழித்த இந்த அஹோபில க்ஷேத்ரத்தில் யானைகளைக் கொன்று கொணர்ந்த தந்தங்களை நரசிங்கப் பெருமான்திருவடியில் ஸமர்ப்பித்து சிங்கங்கள்வணங்கும் சிறப்புபெற்றது சிங்கவேள்குன்றமே".
"யானைபோன்ற ஜீவர்களிடம் உள்ள தேவையற்ற அகங்காரம் மமகாரம் போன்ற தீயகுணங்களை அகற்றி ஜீவர்களின் ஆத்மா எனும் தந்தத்தை ந்ருஸிம்ஹனிடம் ஸமர்ப்பிக்கும் கைங்கர்யத்தை வழுவாமல் நடத்திவரும் அழகிய சிங்கர்கள்  உறைகின்ற இடம் சிங்கவேள் குன்ற்மே".
இது ஸ்வாபதேசம்.
இத்தகைய பெருமை வாய்ந்த அஹோபிலமடத்தின் 44ம் பட்டத்தை அலங்கரித்தவர் "முக்கூர் அழகிய சிங்கர்" எனும் மஹான். பாலாற்றங்கரையிலமைந்த அழகிய க்ராமம் முக்கூர். தமது வாழ்க்கையை ப்ரும்ஹ சர்யம், க்ருஹஸ்தம், துரியாஸ்ரமம் என மூன்று பகுதிகளாக்கி ஞானம் செவி கண் கூர்மைஎன மூன்று கூர்மைகளையயும் தன்னகத்தே கொண்டு ப்ரகாசித்த ஆசார்யனே இந்த முக்கூர் அழகிய சிங்கர்.
பாலும்சர்க்கரையும் சேர்ந்தால் எப்படி தித்திக்குமோ அத்தகைய சுவைபடும் அவதாரமான ஸாக்ஷாத் மன்மதனாகிய அழகிய ந்ருஸிம்ஹனை ஆராதிக்க மன்மத வருஷத்தில் உதித்தார் இந்த அழகிய சிங்கர். 
பஞ்சமின்றி படியளந்த ஹஸ்தம்
பயத்தை பஸ்மமாக்கிய ஹஸ்தம்
பரம க்ருபையால் பல்லாயிரவரை ஸ்ரீவைஷ்ணவர்களாக்கித் தனது ஹஸ்தத்தால் மாலோலனின்கராவலம்பத்தில் சேர்த்த ஹஸ்தம். 
அத்திகிரி அருளாளனாகிய வரதனும் ஹஸ்தத்தில் அவதரித்தவர்தானே.
ஆக அழகிய சிங்கர் திரு அவதாரத்தால் மன்மதவருஷம் ஆவணி மாஸம் ஹஸ்த நக்ஷத்ரம் பெருமை பெற்றன என்றால் அது மிகையாகாது!

முக்கூர் இந்த அவனிக்கு அளித்த வரப்ரஸாதமே  "வேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேசிகன்" என்ற துரியாஸ்ரம திருநாமம் கொண்ட இந்த அழகிய சிங்கராகிய முக்கோல்முனி. "ராமானுஜ தயாபாத்ரம்" விளைந்த ஆவணி ஹஸ்தம் இவரது ஜன்ம மாஸ நக்ஷத்ரத்துடன் ஒத்த காரணத்தால் ஸ்வாமி தேசிகனின் திருநாமம் ஏற்கும் சிறப்பைப்பெற்றவராகிறார்.
முக்கூர் ஸ்ரீரங்கநாதன் ரங்கநாயகி தம்பதியரின் மூத்த குமாரர் இவர்.
பூர்வாஸ்ரமத்தில் ராஜகோபாலனாக இருந்த அழகிய சிங்கர் ஸ்ரீ முஷ்ணம் வேத பாடசாலையில் வேதாத்யயனம் செய்தார்.
ஸாஸ்த்ர அத்யயனத்தில் அதீத ஈடுபாடு அழகிய சிங்கருக்கு.
தில்லையம்பூர் சக்ரவர்த்தியாச்சார் என்ற மஹா பாண்டித்யம் மிக்க ஸாஸ்த்ர ஞானியிடம்  திருக்குடந்தையில் தர்க்க மீமாம்ஸ வ்யாகரண பௌராணிக விஷயங்களனைத்தையும் கற்றுத்தேர்ந்தார்.
காருக்குறிச்சி அழகிய சிங்கரிடம் பஞ்சஸம்ஸ்காரம் இவருக்கு.
1957ல் நைமிஸாரண்யத்தில்தன் 62ம் வயதில் ஸந்யாஸம் ஏற்றார்.
 
40,41,42,43ஆம் பட்ட அழகியசிங்கரகளிடமும் சக்ரவர்த்தி ஸ்வாமியிடமும் காலக்ஷேபங்கள் செய்த பேறு பெற்ற "பஞ்சாசார்யபரர்" இவர்.
இவரைப்போல பலபேரிடம் பலபேருடன் பலதடவை க்ரந்தங்கள் ஸேவித்தவர்கள் இதுவரை இல்லை எனலாம்.
அசாத்யமான நினைவாற்றல் கொண்ட வர் ."புல்மேயும் ஸமயத்தில் அசை போடக்கூடாது" என்பதை வலியுறுத்தும் வகையில்ப்ரம்ஹ சூத்ரங்களை சந்தை சொல்லி மனத்துள் இருத்திக்கொண்டவர்.
வியக்கவைக்கும் பாணடித்யமும் பரீக்ஷிக்கும் பாங்கும் கொண்டவர்.

திருக்குடந்தை ஆண்டவனிடம் அருளிச்செயல்களில் தேர்ச்சி பெற்ற வித்வான் தசாவதார ஸந்நிதியில் தோற்க வாய்ப்புள்ளது என்று ஆண்டவனே கூறி அனுப்பிய தாக விஷயம்.
"உளன்கண்டாய்" பாசுரம் இரண்டாவதாக எந்த திருவந்தாதியில் வருகிறது என்பது கேள்வி. 2ம் திருவந்தாதி என பதில்வர முதலிலும் மூனறிலும்தான் வருகிறது எனக்கூறி ஆண்டவன் கணிப்பை மெய்ப்பித்தார் அ‌ழகியசிங்கர!

கொடைவள்ளலாக சிறுபிராயம்முதலே இருந்தவர். தனக்கில்லாமல் வழங்கிய வள்ளண்மை. குதிரை வண்டிக்காரனுக்கு சவாரி இல்லை நாள் முழுதும் என்றதும் தன்மடியிலிருந்ததைக் கொடுத்து மகிழ்ந்தவர். அத்யயனம் செய்தவரகளுக்கு அள்ளிக்கொடுக்கும் ஔதார்யமுடையவர். வந்தவர்களுக்கெல்லாம் வயிறார அன்னமிட்டவர்.
அலுமினியப்பாத்திரக்காரன் வெயிலில் சுமந்து திரிந்ததைச் சகியாமல் அவனிடம் இருந்த மொத்த பாத்திரத்தையும் வாங்கி அவனது கஷ்டம் தவிர்த்த அழகிய சிங்கரின் இரக்க ஸ்வபாவத்தை என்னென்பது!

"குறுங்குடித்தாத்தா"--என்ற அருளிச்செயல் அதிகாரியாகவும் மடப்பள்ளி நிர்வாகியாயும் இருந்த சமயத்தில் 41ம் பட்ட அழகிய சிங்கர் திருநக்ஷத்ர வைபவத்தில் 1000பேருக்கு மேல் ததீயாராதனை .
கறியமுது திருத்த ஆள்பற்றாக்குறை 150 தோல் சீவிய வாழைக்காய்களை வடிசாக்கில் சுற்றி உருட்டுத்தடியாலடித்து ஒரே சீராக 15 நிமிஷத்தில் தயாரிக்கிக் கொடுத்த ஸமயோஜித்தை எங்ஙனம் பாராட்டுவது!!!

அழகிய சிங்கர் செய்துள்ள கைங்கர்யங்கள் அளப்பறியன.
அரங்கன் ஸ்வப்பனத்தில் அளித்த கட்டளையை சிரமேற்கொண்டு  பூமிபூஜை செய்தது முதல் கோபுர ஸம்ப்ரோக்ஷணம் வரை அவர் எதிர்கொண்ட ப்ரச்சனைகள் சவால்கள் எண்ணிலும் சொல்லிலும் அடங்கா!!
மன்னர்களால் முடிக்க இயலாத இச்சாதனையை வேதாந்த தேசிகயதீந்தர மஹாதேசிகன் எனும் முனியினால் முடிக்கச் செய்தான் அந்த அரங்கன்!
13 தளங்கள் கொண்ட உயர்ந்த ராஜ கோபுர அமைப்பு வேலைகளனைத்தையும் அந்த தள்ளாத வயதில் தளராமல் தவறாது மேற்பார்வைசெய்து செவ்வனே பூர்த்தி செய்த திட சித்தத்தை எப்படிப் பாராட்ட!

இத்தனை அரிய சாதனை புரிந்த மஹான், "எல்லாரும் நிறைய தனம் கொடுத்தார்கள்  நான் என்ன ப்ரயாசை பட்டேன்"--என்றாராம். என்னே தன்னடக்கம்!!

ஆதனூர் கோபுரம் அஹோபில கோபுரம் நிர்மாணித்தவரும் இவரே.
திரு எவ்வுள்ளூர் புஷ்கரணியை புனர்நிர்மாணம் செய்து ஜல ஸம்ருத்தி ஏற்படுத்தினார்.
திருவஹீந்த்ரத்தில் மடம், மேலும் பல இடங்களில் மட நிர்மாணம், வாகனங்கள்,  திருவாபரணங்கள் ஸமர்ப்பித்தல் போன்ற எண்ணற்ற கைங்கர்யங்ளைப் பட்டியலிடலாம்.
"கோதை கட்டிய கோபுரம்"-என்ற நாட்டிய நாடகத்தை  உகந்து கடாக்ஷித்து கலப்படமில்லாத கைங்கர்யம் என்று வாயார வாழ்த்தியது ஸ்வாமியின் கலை ஈடுபாட்டைக் காட்டுகிறது. நலிந்துவந்த தெருக்கூத்துக் கலைஞர்களையும் அழகிய சிங்கர் வெகுமானமளித்து உற்சாகப்படுத்தியாயிற்று.

அழகியசிங்கரின் பாண்டித்யமும் வேதாந்த சர்ச்சையில் ஈடுபாடும் நம் அனுமானத்துக்கு அப்பாற்பட்டது. வேதிக் கணிதத்திலும் சதுரங்க ஆட்டத்திலும் வெகு சமர்த்தர்.
ராஜகோபுரக்கட்டமைப்பு கணக்கு வழக்குகளையும் கட்டிட வரைபடங்களையும் அனாயாஸமாய்ச் செய்த மஹான் இவர்.

அழகியசிங்கர் 16க்ரந்தங்கள், 150 வ்யாஸங்கள் ஸாதித்துள்ளார்.
இவற்றிற்குச்சிகரம் வைத்தாற்போல் அமைந்ததுள்ளது ஸ்ரீபாஷ்யம் விஷயமாய் அமைத்த ஸ்லோக க்ரந்தம்.
32 எழுத்து, 8 அடிகள் கொண்ட ஸ்லோகம் அதிகரணத்தின் பெயர்,
அதன்முக்கிய பதம், முன்பின் அதிகரணத் தொடர்பு இத்யாதிகளை
உள்ளடக்கி  "கடுகைத் துளைத்து ஏழ்கடலைப்புகுத்தி குறுகத்தறித்த"
ஸ்லோகம் என்னுமளவுக்கு ப்ரஸித்தி பெற்றது.

இடையறா ந்ருஸிம்ஹ ஆராதனத்தின் தேஜஸ் அவரது திருமுகத்தில் பொலிந்தது .டோலைக் கண்ணனின் கருணை அவரது திரு உள்ளத்தில் நிறைந்திருந்தது. மதம்பிடித்த கோவிந்தன் என்ற யானையைக் காப்பாற்றியது இக்கருணை உள்ளமே!
மனம் வாக்கு செயல் மூன்றிலும் நேர்மையும் உறுதியும் உடையவர்.
ஆகமம் படித்த எந்த வர்கத்தவரும் அர்ச்சகராகலாம் என்ற கோரிக்கயை மறுத்து அதற்குரிய வழித்தோன்றல்களே  அர்ச்சகராக ஏற்புடையவர்கள் என்பதனை அப்போதைய அமைச்சரிடமே பளிச்சென்று உரைத்தவர்.

ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த "மஹாவீர வைபவத்தில்" ராமபிரானை விளிக்கும் பதங்கள் அழகிய சிங்கருக்கு மிகப்பொருந்தும்.
"நிஷ்பன்ன க்ருத்யா"--வாக்கைக் காத்தவன்ராமன். தண்டகாரண்யத்தில் ராக்ஷஸாதிகளிடமிருந்து ரிஷிகளைக்காத்தான். விபீஷண சரணாகதியை ஏற்று அவனுக்கு முடிசூட்டினான். அழகியசிங்கரோ அரங்கனுக்களித்த வாக்கையும் ஆக்ஷேபித்தவர்கள் வாக்கையும் காப்பாற்றினார.

"அஸஹாய ஸூரா"--மன்னர்களால் முடிக்க முடியாத சாதனையை இம்மாமுனிவர் முடித்து மக்களாலும் ராஜாங்கத்தாலும் எழுந்த சவால்களை அரங்கன் துணை மட்டுமே கொண்டு சமாளித்தது அஸஹாய ஸூரத்தனம்தானே!!

"வீரா"--திருவஹீந்த்ர புரம் மடம் ஜீரணோத்தாரணம் செய்யயுங்கால் மடத்தின்வாயலில் வெகுகாலமாய் ஆக்ரமித்திருந்த டீ கடைக்காரனிடம் நயமும ந்யாமும் பலிக்காமல்போக யானையைக் கொண்டு இடிக்க வீர முழக்கமிட்டதும் சாதுவாய் நகர்ந்தான் டீ கடைக்காரன்.!!

"அநந்ய ஸாஸனீயா"---உத்தரவுக்குப் பணியாதவர். ராஜ கோபுர ஸம்ப்ரோக்ஷண நாள் மாற்றப்படக்கொணர்ந்த உத்தரவை ஆக்ஷேபித்து மாலோலன் நியமனப்படியே நடத்திக காட்டியவர்.

ஏழை ஏத லன் கீழ்மகன்என்னாது இறங்கித்தன் வாத்ஸல்யத்தையும் ஸௌலப்யத்தையும்  குஹன் ஸூக்ரீவன், ஸபரீ, குசேலன், குப்ஜா  முதலானோரிடம் காட்டிய ராம க்ருஷ்ணாதிகளையொத்தது  நம் அழகிய சிங்கர் ஸ்ரீரங்கம் ஜவளிக்கடை நாச்சிமுத்து, தஸாவதாரஸந்நிதி பாதுகாவலர்கள் ஜயராமன், பச்சையம்மா, படக்கடை அமீர்பாய் ஆகியோரிடம் காட்டிய பரிவும் ஸௌலப்யமும்!

பங்களூரில் நிர்மாணித்த மடத்தின் ஸம்ப்ரோக்ஷணத்தன்று அதில்அன்வஹிக்க வந்திருந்த அவரது பூர்வாஸ்ரம திருக்குமாரர் திடீரென பரமபதிக்க, சற்றும் ஸஞ்சலமற்றவராய் அன்று நடக்க வேண்டிய ஸுப காரியங்களை மேற்கொண்டு நடத்திய அவரது ஸந்யாஸ மனத்திண்மையை விவரிக்கத்தான் இயலுமோ!!

இத்தகைய 44ம் பட்ட அழகியசிங்கராகிய ஆசார்ய ஸார்வபௌமன் 36 ஸம்வத்ஸரங்கள் சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் அனுஷ்டித்த பெருமை பெற்றவர்.

அவரது திருவடிவாரத்தில் அடியோங்கள் பஞ்சஸம்ஸ்காரம் பெற்றுக்கொண்ட
பாக்யஸாலிகள் என்னும்போது பெருமிதம்கொள்ளும் அதே நேரத்தில் இப்பேர்பட்ட மஹானை  பலமுறை சென்று ஸேவித்து அவரது திவ்ய கடாக்ஷத்துக்குப்பாத்ரமாகாமல் இருந்து விட்டோமே என்ற ஏக்கமும் ஆதங்கமும் மேலோங்கி இருப்பது நிதர்ஸனம். 

"ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்த்ர த்ருஷ்டம்
லக்ஷ்மீந்ருஸிம்ஹ ஸட‌ஜித் கருணைக பாத்ரம்
ஸ்ரீரங்க வீரரகுராட் ஸடகோப ஹ்ருத்யம்
வேதாந்த தேஸிக யதீந்த்ரமஹம் ப்ரபத்யே"

ஸ்ரீமதே ஸ்ரீவண்சடகோப ஸ்ரீவேதாந்த தேசிக யதீந்த்ர மஹாதேஸிகாய நம:

இந்த ஆசார்ய தனியன்  நம் குறைகளனைத்தையம் அகற்றி நிறைவளிக்க வல்லது.
ஆசார்யன் திருவடிகளே சரணம்🙏🙏
ஸர்வம் ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணமஸ்து! 🙏🙏

(அழகியசிங்கர் திருநக்ஷத்ரதன்று Global Stotra Paaraayana Kainkaryam (GSPK) மூலம் நிகழ்ந்த நாவல்பாக்கம் ஸ்ரீவாஸுதேவாச்சார் ஸ்வாமி, பழவேரி ஸ்ரீ பாலாஜி ஸ்வாமி, ஸ்ரீ APN ஸ்வாமி, ஆசுரி ஸ்ரீ மாதவாச்சார் ஸ்வாமி ஆகியோரின் உபந்யாசங்களிலிருந்து க்ரஹித்த விஷயங்களின் தொகுப்பு இது.)
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

Friday, August 14, 2020

காரானை இடர் கடிந்த கற்பகமே!


சிறார்களுக்கு நம்முன்னோர்கள் சொல்லும் கதைகளில் முதன்மையானது கஜேந்த்ர மோக்ஷம்.காலையில் கண்விழிக்கும் போது இக்காட்சியை எண்ணி எழுதல் நலம் பயக்கும் என்பது வழக்கு.

குழந்தைகளுக்கான இக்கதையில் நம் அனைவர்க்கும் வேதம் வேதாந்தம் இரண்டையும்  இணைத்து மிகச்சிறந்த சரணாகதி தத்துவத்தை க் காட்டுகின்றான் எம்பெருமான்.

எம்பெருமானுக்கே மூன்று இக்கட்டான சமயங்கள் நேர்ந்தனவாம். அதில் முதலிடம் பெறுவது கஜேந்த்ர ரக்ஷணம்."ஆதிமூலமே" என்றலறிய யானையைக் காக்க அரைகுலைய நிலைகுலைய புள்ளூர்ந்து ஓடி வந்தானே எம்பெருமான்.என்னே அவன் கருணை!! அவன் வந்த வேகத்துக்குப் பல்லாண்டு பாடியுள்ள அருமைதான் என்னே!!

"எங்கே உன் ஹரி??" என்று ஆக்ரோஷித்தான் ஹிரண்யகசிபு.தன் பக்தன் ப்ரஹ்லாதன் வாக்கை மெய்ப்பிக்கச் சட்டென ஓர்அவதாரம்எடுத்து அசேதனமான தூணைத்  தாயாக்கியது இரண்டாவது challenge.

"ஹே க்ருஷ்ணாச்சுத போ க்ருபாஜலநிதே" என்று கைகூப்பிக்கதறிய த்ரௌபதிக்கு அபயகரம்வழியேகூறை சுரந்து ரக்ஷித்தது மூன்றாவது challenge.

இதில் முதலாவதாக அமைந்த கஜேந்த்ர ரக்ஷணத்தை ஆழ்வார்கள் ஒரே வரியிலும் ஒரு பாசுரமாகவும் அனுபவித்ததை நாமும் அனுபவித்து உய்வு பெறுவோமாக!

"பருந்தாட் களிற்றுக்கு அருள்செய்த பரமன் தன்னை"__என்கிறாள் ஆண்டாள் நாச்சியார் திருமொழியில்

"பதக முதலை வாய்ப் பட்ட களிறு
கதறிக் கைகூப்பி என்கண்ணா கண்ணா என்ன
உதவப் புள்ளூர்ந்து அங்கு உறுதுயர் தீர்த்த
அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் "____என்று 
பெரியாழ்வார் தன் மகளின் ஓர்வரியை ப்பாசுரமாக்குகிறார்.

"ஒரு வாரணம் பணி கொண்டவன் பொய்கையில்"---  (4-2-5) என்று திருமாலிருஞ்சோலை அழகனை விளித்து பெரியாழ்வார்

"துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்துத் துணையாவதென்று
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் 
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்"------என்று(4-10-1) அரங்கனிடம் அடைக்கலம் கொள்கிறார்..

பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில்
"குட்டத்துக் கோள்முதலை துஞ்ச குறித்தெறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு"__என்று செய்யும் சரணாகதியை

"விழுங்கிய முதலையின் பிலம்புறை
பேழ்வாய்வெள் எயிறு உர அதன் விடத்துக்கு அணுகி
அழுங்கிய யானையின் அருந்துயர் கெடுத்த
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே"____என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாசுரமாக்கியுள்ளார்.


எம்பெருமான் திருக்கரங்களால் 
சக்கரப் பொறி ஒற்றிக்கொண்ட பெரும் பேற்றைப் பெற்ற வரல்லவா திருமங்கை மன்னன்!! அதனால்தானோ என்னவோ கஜேந்த்ர ரக்ஷணத்தை பல பாசுரங்களால் அனுபவித்துள்ளார்.

"தூம்புடைத் திண்கை வன்தாள் களிற்றின் துயர் தீர்த்து"---(2-9-5)
"கைம்மான மதயானை இடர்தீர்த்த கருமுகிலை"(8--9--1).  என்று ஒரு வரியில் கோடிட்டுக் காட்டியதை
"கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை----(ஸம்ஸாரமாகிய பெரும் குளத்தில்)
வைகு தாமரை வாங்கிய வேழம்------ (ஜீவனாகிய யானையை)
முடியும் வண்ணம் முழுவலி முதலை பற்ற_____(காம க்ரோத லோப மோக மதமாதஸரர்யங்களாகிய முதலை பற்ற)
மற்றது நின்சரண் நினைக்க,___(யானை  எம்பெருமானை க்கதறி அழைக்க)
கொடிய வாய் விலங்கு இன்னுயிர் மலங்க______ (முதலையன் உயிரை மாய்க்கும் வண்ணம்)
கொண்ட சீற்றம் ஒன்று உண்டுளதென அறிந்து உன்
அடியனேனும் வந்து அடிஇணை அடைந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே"________ (ஓடிவந்து யானையைக் காத்தாயே!
உன்னை நானும் சரணடைகின்றேன்) என விரிவான பாசுரமாக்கியள்ளார்(5-8-3)

நாங்கூர் திருப்பதியில் ஒன்றாகிய
மணிமாடக்கோயில் பாசுரத்தில் 
"முதலைத் தனிமா முரண் தீர அன்று
முதுநீர்தடத்துச் செங்கண் வேழம்உய்ய
விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி
வினை தீர்த்த  அம்மானிடம்"______. சென்று வணங்கும்படி தன் மனத்தைப் பணிக்கிறார் கலியன்.

நாயகி பாவத்தில் மடலூர்ந்த அருள்மாரி பரகாலன் எம்பெருமானின் சாமர்த்தியங்களைப் பட்டியலிடும்போது 
"போரானைப் பொய்கைவாய்க் கோட்பட்டு நின்றலறி
நீரார் நெடுங்கமலம்கொண்டோர் நெடுங்கையால்
நாராயணா ஓ மணிவண்ணா நாகணையாய் வாராய்
என் ஆரிடரை நீக்காய் என வெகுண்டு
தீராத சீற்றத்தால் சென்று இரண்டு கூறாக ஈரா அதனை இடர் கடிந்தான் எம்பெருமான்"______என்று கஜேந்த்ர ரக்ஷணத்தை  மேற்கோளிட்டு சிறப்பிக்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து யானைபூட்டிய தேரில் திருக்குடந்தையில் வந்திடம் கொண்ட ஆரா அமுதனுக்கு திருத்தேர் வடிவிலேயே வடிவமைத்த
பாசுரம்திரு எழு கூற்றிருக்கை.
ஒன்று முதல் ஏழு வரையலான எண்களால் உரிய சொற்களை அடுக்கி எம்பெருமானின் திரு அவதாரச் சிறப்புக்களை உள்ளடக்கி 
பரகாலன் வரைந்த பாசுரத்தேர் இது.
இச்சித்திரத் தேரினில் 
"நால் திசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி
நால்வாய மும்மதத்து இருசெவி
ஒரு தனி வேழத்து அரந்தையை
ஒரு நாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை"
____என்று கஜேந்த்ர ரக்ஷணம் வெளிப்படுகிறது.

வேங்கட க்ருஷ்ணனாக வும் அரங்கனாகவும் ஆளரியாகவும் திரு அல்லிக்கேணியில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் கருடாரூடனாக பறந்து வரும் கஜேந்த்ர வரதனை
"மீனமர் பொய்கை நாள்மலர் கொய்வான்
வேட்கையினோடு சென்றிழிந்த
கானமர் வேழம் கைஎடுத்து அலற
கரா அதன் காலினைக் கதுவ
ஆனையின் துயரம் தீரப்புள்ளூர்ந்து
சென்று நின்று ஆழி தொட்டானை
தேனமர் சோலை மாடமாமயிலைத்
திருவல்லிக் கேணிக் கண்டேனே"____
என்று படம்பிடித்துக் காட்டுகின்றார் மானவேல் கலியன்.

அருமறைகளை அந்தாதியாகச் செய்து அவனியோர் உய்வடைய அருளிய திகழ் வகுளத்தாரான் நம்மாழ்வார்.
"கைம்மா துன்பம் கடிந்த பிரானே" (2-9-1) என்று எம்பெருமானை அழைத்து நின்தாள் யான் எய்த ஞானக்கைதா காலக்கழிவு செய்யேலே என்கிறார்.
"மொய்மாம் பூம்பொழில் பொய்கை
முதலைச் சிறைப் பட்டு நின்ற
கைம்மாவுக்கருள் செய்த
கார்முகில்போல் வண்ணன் கண்ணன்"_____(3-5-1)எனப்போற்றிப் பாடிப் பணிவோம் வாரீர் என்றழைக்கிறார் இன்பமாரி சடகோபன்.

பரம க்ருபாளுவாகிய  பரம்பொருளின் ரக்ஷண லக்ஷணத்தை ஆழ்வார்கள் வித விதமாக அரங்கேற்றியுள்ளதனை மனத்தால் நினைத்து வாயால் பாடி மகிழ்வோமாக!!!!
🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 🙏🙏

Tuesday, July 7, 2020

யாம் அனுபவித்து மகிழ்ந்த ஸ்ரீ தேசிக விஜயோத்ஸவம் (10 மே 2018 - 18 மே 2018)


சேதனர்களை உய்விக்க எம்பெருமான் ஆழ்வார் ஆசார்யர்களை அவதரிப்பித்தான். நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் ஸ்ரீ பாஷ்யகாரர் முதலியோரும் அவர்களது ஸ்ரீஸுக்திகளும் மக்களை நன்னெறிப் படுத்தின.


வேதங்களையும், ஸ்ம்ருதிகளையும் ப்ரமாணமாய்க் கொண்ட விஸிஷ்டாத்வைத ஸித்தாந்த ரஹஸ்யார்த்தங்களை விரிவாய் நாமெல்லாம் தெரிந்து கொள்ள திருவுள்ளம் பற்றினான் எம்பெருமான். அதன் பயனே பொய்கை ஆழ்வார், நடாதூர் ஆம்மாள், அப்புள்ளர், ஸ்ரீபாஷ்யகாரர், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் முதலான மகான்கள் நித்ய வாசம் செய்த காஞ்சியம்பதியில், தூப்புல் திவ்ய தேசத்தில், திருமலையப்பனின் `கண்டா` அவதாரமாக ஸ்ரீதேசிகனை அவதரிப்பித்தார். இம்மஹானின் 750வது திருநக்ஷத்ரத்தை ஒட்டி ‘ஸ்ரீ ராமானுஜ தயா’ என்ற அமைப்பு ஜனவரி 2018ல் தொடங்கி ஒரு மாபெரும் விஜயோத்ஸவத்தை ஏற்பாடு செய்து கோலாஹலமாய் நடத்தியது. அதில் பங்கேற்ற அடியேன் அனுபவத்தை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


நாவல்பாக்கம் ஸ்ரீவாஸுதேவாச்சாரியார் ஸ்வாமியின் கருத்தில் விளைந்த `ராமானுஜ தயா` என்ற வ்ருக்ஷம் ஈன்ற கனி ஸ்ரீ தேசிகனின் மங்கள விக்ரஹம். ஸ்ரீபெரும்புத்தூர், தூப்புல் காஞ்சி, திருமலையில் மங்களா ஸாஸனங்களாகி ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் தீர்த்தவாரியாகியது. முன்பு ஜனவரியில் 3 நாட்கள் மஹோத்ஸவமாக‍ அரங்கன் ஸந்நிதியில் வேதாந்த தேசிகன் காட்டிய வாழ்க்கை நெறிகள் (ஸ்வாமி வாஸுதேவாச்சார் எழுதியது) புத்தக வெளியீடு ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ நரஸிம்மன் தலைமையில், வித்வத்ஸதஸ், யானை மேல் ஸ்ருதப் ப்ரகாசிகா பவனி என்று வைபவமாக நடந்தேறியது. ஸ்வாமி தேசிகனின் 40க்கும் மேற்பட்ட ஸ்ரீஸுக்திகள் பற்றிய வார்த்தா வைபவங்கள் மிகப்பெரிய வித்வான் மணிகளால் நிகழ்த்தப்பட்டு youtube-ல் வெளிவந்தன.


மைசூர் பரகால மடத்தில் (4-5-2018) ஹயக்ரீவன் மங்களாஸாஸனம், கன்னட மொழிபெயர்ப்பு நூல் வெளியிடு, பரகால மட ஜீயர் ஸ்வாமி அனுக்ரஹ பாஷணம் ஆகி பங்களூர் வழியே ஹைதராபாத் சேர்ந்து `வேதாந்த தேசிகனின் வாழ்க்கை நெறிகள்` புத்தகத்தின் தெலுங்கு மொழி பெயர்ப்பு வெளியீடு ஓர் பெரும் கலை விழாவுடன் நடந்தேறியது. பின்பு குருக்ஷேத்ரம் வழியே டெல்லியில் (10-5-2018) ஓர் மாபெரும் கலை விழாவுடன் வாழ்க்கை நெறிகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு வெளியீடு ஸ்ரீ பராசரர் தலைமையில் நடந்தேறியது.


அயோத்தியிலிருந்து ஸ்ருங்க பேரியில் குஹஸஹாயத்தைப் பெற்றபின் ஸீதா ராம லக்ஷ்மண ஸந்நிவேசம் சித்ர கூடத்தில். அநசூயை முப்பெரும் கடவுளரைக் குழவிகளாக்கி மடியில் கிடத்தி மகிழ்ந்தது, பரதன் பாதுகை பெற்றது, ஜெயந்தன் கண்ணை இழந்தது - ஆகியன இவ்விடத்தே நிகழ்ந்த வ்ருத்தாந்தங்கள்.



சித்திரக் கூடத்திருப்ப சிறுகாக்கை முலைதீண்ட

அத்திரமே கொண்டெறிய அனைத்துலரும் திரிந்தோடி

வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்றழைப்ப

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுமோர் அடையாளம் (பெரியாழ்வார் திருமொழி)


இதனை விளக்குமுகமாக மந்தாகினி நதி தீரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சோலையருகே அமைந்த பாறை உளது. இந்த மந்தாகினி நதிக் கரையில் நிகழ்ந்த காகாஸுர வ்ருத்தாந்தத்தை ஸ்வாமி தேசிகன்

“சோகம் தவிர்க்கும் சுருதிப் பொருள் ஒன்று சொல்லுகின்றோம்

நாகம் தனக்கும் இராக்க‍தற்கும் நமக்கும் சரணாம்

ஆகண்டலன் மகனாகிய ஆவலிப்பு ஏறிய - ஓர்

காகம் பிழைத்திடக் கண் அழிவே செய்த காகுத்தனே” - என்று அம்ருத ஸ்வாதினியில் சித்தரிக்கிறார்.

கோதாவரி குகை வழியே நெளிந்து வளைந்து செல்லும் `குப்த கோதாவரி`, ஆஸ்சர்யமான ஒரு தோற்றம்.


இங்கு `ராமாயண் குடி` என்ற இடத்தில் ஸ்ரீதேசிகன் எழுந்தருளி வித்வத்ஸதஸ் முடிந்து மாலை 6 மணி அளவில் (12-5-2018) `காமதகிரி வலம்`. சுமார் 6 கி.மீ-க்கு 2 குடை மங்கள வாத்யத்துடன் ஆஸ்திக அன்பர்கள் புடை சூழ ஸ்தோத்ர பாராயணாதிகளுடன் சென்று பரதனுக்கு பாதுகை ஈந்த இடத்தில் ஸ்ரீதேசிகன் ஏள்ள பாதுகாஸஹஸ்ர பாராயணமாகியது. நாம் நினைத்ததை தரும் காமதேனுவாம் இம்மலை. அயோத்யாவில் ராம ப்ரதிஷ்டை ஆகி சர்ச்சை தீர்ந்து ராம ஜன்ம பூமியில் அவனுக்குக் கோயில் அமைய ப்ரார்த்தித்தோம்.


13-5-2018 அதிகாலை 4 மணிக்குக் கிளம்பி அலஹாபாத் த்ரிவேணி சங்கமத்தில் 9 மணியளவில் விதானம் அமைத்து கைத்தலத்தில் ஸ்ரீதேசிகன் எழுந்திருளி வாத்ய முழக்கத்துடன் திருமஞ்சனம் கண்டருளி தீர்த்தவாரி ஆகியது. வார்த்தைகளால் இதனை வர்ணிக்க இயலாது!! இங்கிருந்து அயோத்தி புறப்பாடு மதியம் 1 மணியாகியது. மாலை 6 மணிக்கு நந்திக்கிராமத்தில் பரதனின் பாதுகா ராஜ்யத்தில் ஒரு சிறிய பாதுகா ஸஹஸ்ர பாராயணம் முடிந்து 9 மணியளவில் அயோத்தி சேர்ந்தோம். ராம ஜன்ம பூமியில் தேசிகன் எழுந்தருளியதும் வருணன் மகிழ்ந்து பூமி குளிர்ந்தது.


14-5-2018 காலை ஸரயூ நதி தீரத்தில்,

`கற்பார் ராமனை அல்லால் மற்றும் கற்பரோ

புற்பா முதலா புல்லெறும்பு ஆதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்

நற்பாலுக் குய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே`

(திருவாய்மொழி)


என்று ஸ்ரீராம பிரானின் குணாதிசயத்தை விளக்கினார் நாவல்பாக்கம் ஸ்வாமி. இங்கு ஆனந்தமாய் தீர்த்தவாரி கண்டருளிய தேசிகன் ரங்கநாதஸ்வாமி கோயிலுக்கு எழுந்தருளி ஆங்கே ஸந்த் கோஷ்டியில் அபீதி ஸ்தவ, ஸ்ரீரகுவீரகத்ய பாராயணம் கோஷம் விண்ணை எட்டியது என்றால் மிகையாகாது. எதிரே வால்மீகி ராமாயணம் 24000 ஸ்லோகங்களும் கல்வெட்டில் பொறித்தமைந்த வால்மீகி பவனம்.
“இனி உன்னை உன் ஜென்ம பூமியில் எழுந்தருளப்பண்ணி திருக்கோயில் நிர்மாணிப்பது என் பொறுப்பு” - என்கிறார் போல் ஸ்ரீதேசிகன் குடை வாத்தியம் புடை சூழ ஓர் அற்புதமான வீதி புறப்பாட்டுடன் `ஸ்ரீஸுக்ரீவ கிலா` ஸ்ரீபட்டாபிராமன் ஸந்நிதியில் (இது ராமபட்டாபிஷேக ஸமயத்தில் ஸூக்ரீவன் தங்கிய மாளிகையாம்) எழுந்தருளப்பண்ணப்பட்டார். ஆஹா என்ன ஸந்நிவேஸம்!

“ஒரு மகள் தன்னை யுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகள் போல் வளர்த்தேன்

செங்கல்மான் தான் கொண்டு போனான்”
- என்றார் அன்று பெரியாழ்வார்.


“ஒரு மகன் தன்னை யுடையேன்

உலகம் நிறைந்த புகழால்

திருமகன் போல் வளர்த்தேன்

திரு அயோத்தி ராமன் கொண்டு வைத்தான்”
- என்பது நாவல்பாக்கம் ஸ்வாமி வாக்கு. இத்துனை நாளாய் நம்மோடு இருந்த தேசிகனை இன்று இங்கு விட்டுச் செல்கிறோம். பெண்ணை புக்ககம் அனுப்புமு பெற்றோர் போன்ற நிலையை அவர் விவரித்த விதம் எல்லோர் கண்களையும் குளமாக்கியது. ~ஸ்ரீராமா, உன் பொருட்டு எங்கள் தேசிகனை விட்டுச் செல்கிறோம். நீ உன் நீண்ட கால ப்ரயாசையைப் பூர்த்தி செய்து கொள்~ - என்று ப்ரார்த்தித்தோம்.


அன்று மாலை அங்கு நடந்த வித்வத்ஸதஸில் பேசிய மஹனீயர்கள் தேசிகன் பால் கொண்ட பக்தியும், அவரது ஸ்ரீஸூக்திகளில் கொண்ட ஆழ்ந்த ஞானமும் பிரம்மிப்பூட்டுவதாயிருந்தது. ந்யாச தசகம், ந்யாச விம்சதி, தயாசதகம், வைராக்ய பஞ்சகம், ஹயக்ரீவ ஸ்தோத்ரம், வரதராஜ பஞ்சாஸத் - என்று அவர்கள் காட்டிய மேற்கோள்கள் மெய்சிலிர்க்க வைத்தன.


அடுத்து 15-5-2018 அமாவாசை தர்ப்பணாதிகளை ஸரயூவில் முடித்துக் கொண்டு மதியம் 1 மணியளவில் புறப்பட்டு இரவு 11 மணியளவில் ப்ருந்தாவனம் சேர்ந்தோம். ப்ராசீனமான கேசிககாட் - ஸ்ரீவேதாந்த தேசிகாஸ்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் விலக்ஷணமாக எழுந்தருளியுள்ளார் இங்கு.


16-5-18 காலை 8 மணிக்கு க்ருஷ்ண ஜன்ம ஸ்தலத்தில் ஸ்வாமி தேசிகனை எழுந்தருளப்பண்ணி பக்தர்குழாம் கோபால விம்ஸதி, பெரியாழ்வாரின் முதல் திருமொழி “வண்ண மாடங்கள் சூழ்” விண்ணதிர அநுசந்தித்தது கண் கொள்ளாக் காட்சி. அகிலாண்ட கோடி ப்ரம்ஹாண்ட நாயகன் ஓர் சிறிய காராக்ருஹத்தில் அவதரித்த எளிமை நம்பொருட்டே! அங்கிருந்த பெரிய அரங்கில் மகனீயர்கள், ஆஸ்ரம அத்யகர் ஸ்ரீஅநிருத்தாச்சார் ஸ்வாமி உள்பட ஸ்ரீதேசிகனின் பெருமையைப் பறக்கப் பேசினர்.


கிருஷ்ண ஜன்ம பூமியில் மங்களாசாஸனம் நடந்த அன்று ரோஹிணி நக்ஷத்திரம் என்பது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயமாகும்.


அன்று மாலை மதுராவில் நடந்த ஸ்வாமி தேசிகன் வீதி புறப்பாட்டின் சீர்மை சொல்லில் அடங்காது. ஸர்வாலங்கார பூஷிதராக ஸ்வாமி தேசிகன் இரட்டைக் குடையுடன் மங்கள மல்லாரி வாத்தியம் முழங்க வேத கோஷமும் தேசிக ப்ரபந்தமும், தேசிக ஸ்தோத்ர பாராயணமும் பின் தொடர இரு புறமும் பளீர் என்ற விளக்கொளியுடன் வழி நெடுக மதுரா மக்கள் மலர் மாரி பொழிய ராஜ நடையுடன் வலம் வ‍ந்த அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.


யமுனா தீரத்தில் கண்ணன் பலராமன் யசோதை நந்தகோபருடன் வீற்றிருக்கும் கோவிலில் ஸ்வாமி தேசிகனை ஏள்ள பண்ணி பெரியாழ்வார் திருமொழி, யாதவாப்யுதயம் ஸேவித்தோம். கண்ணன் கோபஸ்த்ரீகளின் வஸ்த்ரம் ஒளித்ததும், யசோதைக்கு வாயுள்ளே வையம் காட்டியதும் இங்கேதான்.


“விபுலோலூகல கர்ஷகம் குமாரம்” - என்று கண்ணன் உரலோடு கட்டுண்டு மருதம் சாய்த்த இடத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருள, “கண்ணி நுண் சிறுத்தாம்பு” 11 பாசுரமும், “பத்துடை அடியவர்க்கு எளியவன்” பாசுரமும் ஸேவித்து, கண்ணன் அக்ரூரரைச் சந்தித்து மணலில் புரண்டு விளையாடிய `ரமண் ரேடி` என்ற இடம், குன்று குடையாய் எடுத்த கோவர்த்தனத்தில் மங்களா ஸாஸனம் முடிந்து திரும்பினோம். விழுந்து ஸேவித்துக் கொண்டே கோவர்த்தன பரிக்ரமா 32கி.மீ. செய்யும் ஜனங்களின் பக்தி வியக்கத்தக்கதாயிருந்தது.


17-5-18 காலை யமுனா தீரத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு விலக்ஷணமான திருமஞ்சனம் செய்வித்து தீர்த்தவாரி ஆகியது. தொடர்ந்து நாச்சியார் திருமொழி பாராயணம், கண்ணன் விளையாடி மகிழ்ந்த ப்ருந்தாவனத்தில், ஆசார்யனை முன்னிறுத்தி, பெரியாழ்வாரின் திருமகள் ஆண்டாள் பாடிய “ப்ருந்தாவனத்தே கண்டோமே” 10 பாசுரங்களும் ஸேவித்த பாங்கையும், அந்த அனுபவத்தையும் சொல்லீ மாளாது!


ப்ருந்தாவனத்தில் ரங்க‍ஜி மந்திர், கண்ணாடியிலேயே ஜொலிக்கும் ஸீஷ்மஹால், “நிதி வன்” என்னும் ராசக்ரீடை ஸ்தலம் (இது முழுவதும் மல்லிகை கொடி கொத்தாக குழுமியிருக்கும்) மல்லிகை புஷ்பாலங்காரத் தோரணங்கள் விதவிதமான வடிவமைப்புகளில் அழகுற தொங்கவிடப்பட்டு விளங்கும் வசீகரமான மாளிகையில் ராதே க்ருஷ்ண தரிசனம் தரும் “பைங்க் பிஹார்” என்ற கோவில் சொல்லொணா அழகுடன் திகழ்ந்தது. அன்று 6 மணியளவில் தொடங்கிய ஸத்ஸங்க சொற்பொழிவுகள் முடிந்து தேசிகாஸ்ரமத்தில் “கோபால விம்ஸதி” கல்வெட்டில் பொறித்து திறக்கப் பட்டது. இத்துடன் ஸ்ரீதேசிக விஜய யாத்ரோத்ஸவம் நிறைவ‍டைந்தது.


ஸ்வாமி தேசிகனின் அவதார காலத்தில் நாம் எப்படி இருந்தோமோ தெரியாது. அவரது 750வது திரு நக்ஷத்ரத்தில் அவரது அர்ச்சா விக்ரஹத்துடன் அவர் மங்களாஸாஸனம் செய்த திவ்ய தேசங்களுக்குச் சென்று, அவருடன் தீர்த்தவாரி ஆகி, அவரது ஸ்ரீஸூக்திகளை ஸேவிக்கும் பாக்யம் நமக்குக கிட்டியது, நம் சந்ததியினர், நண்பர்கள் அனைவர்க்கும் போய்ச் சேரும். அவரது ஸஹஸ்ராப்தியை நம் சந்ததிகள் கண்டு களிக்கும் போது நாம் ஸ்வாமி தேசிகனுடன் விண்ணுலகில் களிக்கப்போவது உறுதி.


ஸ்ரீநிகமாந்த மகா தேசிகனின் இந்த 750வது திரு நக்ஷத்ர வைபவ விஜயோத்ஸவம் நாவல்பாக்கம் ஸ்ரீயக்ஞம் ஸ்வாமி, ஸ்ரீவாஸூதேவாச்சார் ஸ்வாமி, ஸ்ரீ அனந்த பத்மநாப ஸ்வாமி, கூத்தப்பாக்கம் ஸ்ரீ ரங்கநாதன் ஸ்வாமி, ஹைதராபாத் ஸ்ரீ முகுந்தன் ஸ்வாமி, பெங்களூர் ஸ்ரீ பத்ரீ ஸ்வாமி, ஸ்ரீ சுந்தர வரதன் ஸ்வாமி ஆகியோரின் அரும்பெரும் முயற்சியினால் சாத்தியம் ஆகியது என்றால் அது மிகையாகாது. அவர்கள் அனைவருக்கும் எமது க்ருதஞைகளைத் தெரிவிப்பதுடன், எம்பெருமான், ஆழ்வார் ஆசார்யர்களின் பரிபூர்ண கடாக்ஷம் என்றென்றும் கிடைக்க வேணுமாய் மனதாரப் ப்ரார்த்திக்கிறோம்.


“சீர் தூப்புல் குலமணியே வாழி நின் வடிவே”